முதுகலை ஆசிரியர் பணி, உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 27,28,29ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்களில் ,ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 37 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் 30ஆம் தேதி தேர்வர்களின் விடைத்தாள், அவர்கள் அளித்த விடைகளை அவர்கள் பார்வையிடும் வகையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தேர்வர்களுக்கான உத்தேச விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டன. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடை குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிகளில் மட்டுமே பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால், பிற வழிமுறைகள் ஏற்கப்பட மாட்டாது’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: