ETV Bharat / state

மாநில கல்விக் கொள்கை திட்டம் வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது; மேலும் 4 மாதத்திற்கு கால அவகாசம்!

author img

By

Published : Apr 3, 2023, 4:02 PM IST

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது எனவும், கூடுதலாக 4 மாதங்கள் கால அவகாசம் கேட்பதற்கு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டில் அமுல்படுத்தப்படாது
தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டில் அமுல்படுத்தப்படாது

சென்னை: தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வராது எனவும், 2024-25ம் கல்வியாண்டு முதல் தான் அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசியக்கல்விக்கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பல்வேறுஅம்சங்களும் ஏற்க முடியாத அம்சங்களாக இருப்பதாகவும் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு என்று தனியாக குழு அமைத்து உத்தரவிட்டார் .

ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குள் மாநில கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தக்குழுவினர் பல்வேறுத் தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு வருகின்றனர். மேலும் குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாகவும் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயார் செய்து வருகின்றனர்.

இந்தப் பணிகள் இன்னும் முடிவடையாமல் நிலுவையிலே உள்ள நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, பணிகளை முடிப்பதற்கு அரசிடம் மேலும் 4 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்பதற்கு குழு திட்டமிட்டு இருக்கிறது.

கல்விக்கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்த முருகேசன் தலைமையிலான குழு, தற்போது அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடைய கருத்துகளையும் கேட்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 200-க்கும் அதிகமான துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை எழுதும் பணியிலும் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடையாது என்பதால், கூடுதலாக 4 மாதங்கள் கால அவகாசம் கேட்பதற்குக் குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மாநில கல்விக் கொள்கை வரும் ஜூன் மாதம் (2023-24) அமலுக்கு வர வாய்ப்புகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயாரிப்பு பணி முடிவதற்கு கால தாமதமாகும் என்பதோடு, அறிக்கை தயாரானதும் அதன் மீது பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன்பிறகு இறுதி செய்யப்பட்ட அறிக்கையைத்தான் தமிழக அரசுக்கு குழு வழங்க இருக்கிறது. இதற்கெல்லாம் 4 மாதம் முதல் 6 மாதங்கள் வரை பிடிக்கும் என்பதால், இந்த கல்வி ஆண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வராது.

குழுவின் அறிக்கையை அரசிற்கு சமர்ப்பித்த பின்னர், சட்டப்பேரவையில் வைக்கப்பட்டு, அதன் மீது அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. எனவே அடுத்த கல்வியாண்டில் 2024- 25ம் கல்வி ஆண்டில் மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: SSLC Exam: வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் தேர்வு எழுதலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.