ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை சென்னையில் திருடி ஆந்திராவில் பதுக்கல்: 3 பேர் கைது

author img

By

Published : Jan 19, 2022, 7:20 AM IST

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் கைது
3 பேர் கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து இருசக்கர வாகனங்கள் திருடும் கும்பலைத் தனிப்படை அமைத்து பிடிக்க காவலர்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.

துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் இருதயம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் திருடும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வாகனங்கள் பறிமுதல்

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தியாகராய கல்லூரி அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக வந்த இரண்டு பேரை விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் அவர்களது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அது திருட்டு வாகனம் என்பதும், தண்டையார்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவருடைய இருசக்கர வாகனம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவருடைய பெயரும் மணிகண்டன் என்பதும், இவர்கள் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இதுவரை ஏழு இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் சுரேஷ் என்கிற வெங்கையா என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதில் தண்டையார்பேட்டை பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள், ஆந்திர மாநிலம் திருப்பதி பஸ் நிலையம் அருகே இரண்டு வாகனங்கள், திருவொற்றியூர், ஏழுகிணறு பகுதியில் தலா ஒரு வாகனம் என மொத்தம் ஏழு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் இன்று(ஜன.18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா பரவலுக்கிடையே ஆசிரியர்களுக்கு நேரடியாக புத்தாக்கப் பயிற்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.