ETV Bharat / state

"பல்கலைக் கழகங்களில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கக் கூடாது" - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:13 PM IST

Universities Selfie Point issue: செல்ஃபி பாயிண்ட் குறித்த பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கையைப் பல்கலைக்கழகங்கள் நிராகரிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.

Universities Selfie Point issue
பல்கலைக் கழகங்களில் செல்ஃபி பாயிண்ட் அமைக்க கூடாது - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்

சென்னை: பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவும், தனி நபர் துதிபாடவும் பல்கலைக்கழக வளாகங்கள் பயன்படக் கூடாது. டிசம்பர் 1ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை பல்கலைக்கழக வளாகங்களில் சுய புகைப்படம் (Selfie Point) எடுத்துக் கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தக் கோரியுள்ளது.

இந்தியாவின் சமீபத்திய சாதனைகளை விளக்கி, ஏற்பு அளிக்கப்பட்ட வடிவங்களில் மட்டுமே இந்த செல்ஃபி பாயிண்ட் அமைக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளடக்கியதாகப் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அமைந்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தும் ஏற்பாட்டைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரம் எந்த சட்டத்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வழங்கப்படவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய பல்கலைக்கழக மானியக் குழு, சட்டத்திற்குப் புறம்பாகத் தனது எல்லைகளைக் கடந்து மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியின் பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகச் செயல்படுவது மிகவும் ஆபத்தானது.

சமூக மாற்றம், நாட்டின் பன்முக வளர்ச்சி, மனிதக் குல மேம்பாடு, கல்விச் செயல்பாடு ஆகியவைக்கான வளாகமே பல்கலைக்கழகம். அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, பகுத்தும், தொகுத்தும் ஆய்வேடுகளை வெளியிடும் தன்னாட்சி அமைப்புதான் பல்கலைக்கழகம். அத்தகையப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் சாதனைகளைப் பரப்புகின்ற பணியினைச் செய்யும் அமைப்புகளாக மாற்ற முற்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

அரசின் சாதனைகளை விளக்குவதாகக் கூறிக் கொண்டு, பிரதமராக இருப்பவருக்கு விளம்பரம் தேடித் தரும் செல்ஃபி பாயிண்டை வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பல்கலைக்கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும்.

பல்கலைக்கழகங்களின் கல்வியியல் சுதந்திரம், தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் சூழ்ச்சிகளுமான திட்டம்தான் செல்ஃபி பாயிண்ட் வைக்கக் கோரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை. பல்கலைக்கழக வளாகத்தையே மத்திய அரசின் சாதனைகளை விளம்பரம் செய்யும் மையங்களாக மாற்றுவது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது‌.

ஆகவே, டிசம்பர் 1, 2023 தேதியிட்ட "செல்ஃபி பாயிண்ட்" குறித்த பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கையைப் பல்கலைக்கழகங்கள் நிராகரிக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தத்திற்கான போர் தொடரும்" - ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.