ETV Bharat / state

"நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்குக'' - முதலமைச்சர்

author img

By

Published : Dec 26, 2022, 7:16 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதலமைச்சரின் தகவல் பலகை அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tamilnadu
Tamilnadu

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.26) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் பொதுவான செயலாக்கம் குறித்து, முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா? என்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், நிலுவையிலுள்ள சான்றிதழ்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும், அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதலில் தாமதங்கள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல், வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்துத்துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும்; குறைவாக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக களையவேண்டும் எனவும், பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மாநிலத்தில் நடந்த பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் நல்லக்கண்ணு"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.