ETV Bharat / state

பொது இடங்களில் மது அருந்த தடை - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Dec 20, 2022, 1:56 PM IST

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் மது அருந்த தடை - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
பொது இடங்களில் மது அருந்த தடை - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இவ்வாறு மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசிச் செல்கின்றனர். இவை தவிர சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்திவிட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தனியாக செல்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது.

கடந்த 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்து வைக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. இதனால் மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால்,

பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என டிசம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைப்படுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (டிச.20) சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும். எனவே இந்த வழக்கின் மீதான விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தாஜ்மஹாலுக்கு சுமார் ரூ.2 கோடி வரி விதிப்பு - அதிர்ந்துபோன தொல்லியல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.