ETV Bharat / state

அரசு ஊழியர்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் தீபாவளி போனஸ்!

author img

By

Published : Nov 2, 2020, 7:50 PM IST

சென்னை: பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுமார் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  அரசு ஊழியர்ளுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் தீபாவளி போனஸ் அளிக்கொடுத்த இபிஎஸ்
அரசு ஊழியர்ளுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் தீபாவளி போனஸ் அளிக்கொடுத்த இபிஎஸ்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்துவருகிறது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்தாண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2019-20ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ்,1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும். அதேபோல நிரந்தர தொழிலாளர்கள் போனஸ், கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தினை குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் பொதுப் போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் அரசு துறை நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ், கருணைத் தொகையாக வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.