ETV Bharat / state

இரும்பு பெண்மணியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!

author img

By

Published : Dec 5, 2020, 8:27 AM IST

Updated : Dec 6, 2020, 6:15 AM IST

சென்னை: இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.05) அனுசரிக்கப்படுகிறது.

Jayalalithaa
Jayalalithaa

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அகல் விளக்கு ஏற்றி வைத்து சபதம் ஏற்போம் என அதிமுக கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவதையே லட்சியமாகக் கொண்டு உழைத்துவருகிறது அதிமுக. அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வென்று காட்ட, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளன்று மாலை 6 மணிக்கு, அவரது உருவப்படத்துக்கு அகல் விளக்கு ஏற்றிவைத்து சூளுரைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறுமுறை முதலமைச்சர்

ஆரம்பக்காலங்களில் திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு அரசியலில் தடம் பதித்த இவருக்கு 1983இல் அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 1984இல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

சினிமாவில் ஜெயலலிதா

1989 சட்டப்பேரவை தேர்தலில் போடிநாயக்கணூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். அத்துடன், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பின்னர், 1991 அதிமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2001, 2011இல் முதலமைச்சரானார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின், தொடர்ந்து 2ஆவது முறையாக முதலமைச்சராக பதவிக்கு வந்த ஜெயலலிதா, இதுவரை ஆறுமுறை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

எம்ஜிஆருடன் ஜெயலலிதா
எம்ஜிஆருடன் ஜெயலலிதா

மறைவு

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 74 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிச.05ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

சினிமாவில் ஜெயலலிதா

தொடரும்... மர்மம்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அதுபற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக பல முறை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு விசாரணை முடிவடையாததால், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகிறது...

Last Updated : Dec 6, 2020, 6:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.