ETV Bharat / state

"நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

author img

By

Published : Aug 11, 2023, 10:43 PM IST

நெல்லையில் பட்டியலின பள்ளி மாணவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று கூடி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி நாங்குநேரி அருகே உள்ள பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியின் மகன் 17 வயது மாணவன் சின்னதுரை. பட்டியலின மாணவனான இவரை மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதலை நடத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

  • நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக… https://t.co/IA7oclHIYT

    — M.K.Stalin (@mkstalin) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார். அதில், ”தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜ் இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த இரண்டு நாள்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று சம்பவ நிகழ்ந்த இடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இந்த கொடூர சம்பவத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசும், காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Nanguneri Student Attack: நெல்லை கொடூரம்.. வெட்டுப்படாத இடமே கிடையாது.. மாணவர்களின் வெறிக்கு யார் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.