ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

author img

By

Published : May 30, 2023, 5:35 PM IST

வகுப்பறைக் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல் எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Student Admission Awareness in Government Schools - School Education Department Action Order
Student Admission Awareness in Government Schools - School Education Department Action Order

சென்னை: அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஜூன் 7ஆம் தேதி முதல் 2 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள் படிப்புடன் கூடிய செயல்பாடாக, ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை எற்படுத்தும்.

மகிழ்ச்சியான வகுப்பறை நிகழ்வினை, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு, சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள். நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள். கணித உபகரணப் பெட்டி , புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகின்றது.

இதனால் கற்றல் நிலைக்கேற்ப, மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத்திருவிழா கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.

இத்தகைய கல்விசார் முன்னெடுப்புகள் அரசால் எடுக்கப்பட்டாலும், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நம் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2023-2024ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட ஜூன் 7ஆம் தேதி பள்ளி திறக்கும் நாள் முதல் இரண்டு வார காலத்திற்குள் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இவ்விழிப்புணர்வு பேரணிக்கு அரசுப் பள்ளிகள் , பெருமையின் அடையாளம் என்று பெயர் சூட்டி, ஒவ்வொரு பள்ளி அமைவிடத்திலும் ஆசிரியர்கள். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து அப்பட்டியலில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

மேலும் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்கள், கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள். கல்விசார் இணை செயல்பாடுகள் சார்பான விபரங்கள் மக்களிடம் எடுத்து சொல்லப்படவேண்டும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள் குடிநீர் வசதி கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள், எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் முறை மற்றும் இல்லம் தேடிக் கல்வி சார்ந்து விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம். செலுத்தப்பட வேண்டும்.

• அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

• குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த வேண்டும்

  • அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை
  • 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை , பெண் கல்வி இடைநிற்றலைத் தவிரக்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதத்தோறும் ரூ.1000.

சிறப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு போட்டோ தான்.. மம்தா பானர்ஜி பற்ற வைத்த நெருப்பு.. பா.ஜ.தலைவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.