ETV Bharat / state

"தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக" - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

author img

By

Published : Feb 23, 2023, 10:42 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இன்று (பிப்.23) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், என்ஜின் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த 5 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை, இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துகிறது.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத்திற்குரியது. நமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதையும் படிங்க: "விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடும் அரசு, மறுபுறம் விளை நிலங்களை கையகப்படுத்துகிறது" - அன்புமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.