ETV Bharat / state

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு.. தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 10:40 PM IST

தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

Chennai pooja holiday special Bus: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று தொடர்ந்து 4-நாட்களுக்கு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை: தமிழ்நாட்டில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என நாளை(அக்.21) முதல் தொடர்ந்து 4-நாட்களுக்கு விடுமுறை என்பதால், அரசுத் துறை, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சென்னையில் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் விடுமுறைக்காக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை போல காணப்படுகிறது. கூட்ட நெரிசலை போக்கும் வகையிலும், மக்களுக்கான போதிய பாதுக்காபபை வழங்கவும் போக்குவரத்து துறை தற்காலிக பேருந்து நிலையம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்காலிக பேருந்து நிலையங்கள்: சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேட்டை தவிர, தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூவிருந்தவல்லி பைபாஸ் பகுதியில் இருந்தும் இன்று (அக்.20) முதல், 3 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பூவிருந்தவல்லி பைபாஸில்: மாநகர போக்குவரத்துக் கழக பூவிருந்தவல்லி பைபாஸ் அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு: மேற்கூறிய ஊர்களைத் தவிர்த்து இதர ஊர்களான கோவை, திருச்சி, நாகர்கோவில், நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், ஊட்டி உள்ளிட பிற மாவட்டங்களுக்கும், திருவனந்தபுரம், குருவாயூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கபடுகின்றன.

குவியும் முன்பதிவுகள் (30-ஆயிரம் முன்பதிவு): சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் இன்று (அக்.20), நாளை (அக்.21) ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேப் போல் பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு கூடுதலாக 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு மேல் பயணிகள் வரும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து பயணிப்பதற்காக மட்டும் 16 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர்த்து நேரடியாக வந்து பயணச்சீட்டு எடுத்தும் பலர் பயணம் மேற்கொள்கின்றனர். அதே நேரம், நெடுந்தூரம் செல்வோர் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக சிறப்பு முன்பதிவு இல்லாத பேருந்துகளும் இயக்கபடுகின்றன.

போக்குவரத்து நெரிசல்: தொடர் விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சிலர் சொந்த வாகனங்கள் மூலமும் செல்கின்றனர். இதனால், பெருங்களத்தூர், போரூர் சுங்கச்சாவடி, மதுரவாயல் புறவழிச்சாலை, மாதவரம், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்துவருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் பேருந்துக்காக கோயம்பேடு செல்வதால், ஈ.வே.ரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100-அடி சாலை உள்ளிட்ட சாலைகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் 60% கட்டணம் உயர்வு.. கண்ணீர் வடிக்கும் பயணிகள்.. கண்டுகொள்ளுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.