ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு - விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவு

author img

By

Published : Oct 27, 2021, 12:29 PM IST

Updated : Oct 27, 2021, 5:01 PM IST

விசாரணை
விசாரணை

12:17 October 27

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரி, முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிசிஐடியினர்  127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குற்றச் சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (அக்.27) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:   கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

Last Updated : Oct 27, 2021, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.