ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு இன்றுடன் முடியுமா? சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 12:23 PM IST

Minister Senthil Balaji Judicial Custody : அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு இன்றுடன் முடியுமா?
செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு இன்றுடன் முடியுமா?

சென்னை: அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். அதையடுத்து, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது சரி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவர், ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்ட நிலையில், அவருக்கு ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகைகள், 3 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டிரங்கு பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது அமலாக்கத் துறை.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி ஆகஸ்ட் 17ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து, முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி ஆகஸ்ட் 25 ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு காணொலி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மீண்டும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிபதி நீட்டித்தார்.

மேலும், அன்றைய தினமே செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத் துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து, இன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும், அவரை மதியம் 1 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, அமலாக்கத்துறை அவருக்கு எதிராக பல ஆதாரங்களை சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அமலாக்கத்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இரு தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றக் காவலை நீட்டிப்பதா அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜி நிவாரணம் வழங்குவதா என நீதிபதி முடிவு எடுப்பார்.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident : சொந்த ஊர் திரும்பிய 42 பயணிகள்! ஆறா வடுவாய் மாறியதாக புலம்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.