ETV Bharat / state

டிபிஐ வளாகத்தில் க.அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி வழக்கு!

author img

By

Published : Dec 24, 2022, 4:00 PM IST

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி வழக்கு!
டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி வழக்கு!

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்துக்கு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் கட்சிகளும் தங்கள் தலைவர்கள் சிலைகளை அமைக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகி விடும். தலைவர்களை கவுரவிக்க, அவர்கள் பெயரில் நலத்திட்டங்களை தொடங்கினால், பொதுமக்களுக்கும் பயனளிக்கும்.

அதை விடுத்து சிலைகளை அமைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்கட்சியினர் மத்தியில் விரோதத்தையும் ஏற்படுத்தும். ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளதால், டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் க.அன்பழகன் வளாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.