ETV Bharat / state

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 6:45 PM IST

Chennai metro project phase 2: கலங்கரை விளக்கம் நிலையத்தில் இருந்து (upline) திருமயிலாப்பூர் வரை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

chennai metro phase 2 work on progress
chennai metro phase 2 work on progress

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த மூன்று வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிலோ மீட்டருக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேபோல், உயர்மட்ட பாதையில், 76 கிலோ மீட்டருக்கு, 80 ரயில் நிலையங்களும், இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனைகளும் அமைக்கபட்டு வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில், பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், சுரங்கம் தோண்டும் பணிகளும், சென்னையில், இருந்து புறநகருக்கு செல்லும் வழியில், உயர்மட்ட பாதையும் தற்போது அமைக்கபட்டு வருகிறது. அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதேபோல் கலங்கரை - பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும் விரைவில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணியானதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில், 4ஆவது வழித்தடத்தில், "பிளமிங்கோ" என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அன்று சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது.

அதேபோல் "கழுகு" என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலைப்பூர் நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026ஆம் ஆண்டில் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.