ETV Bharat / state

"போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது" - பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 5:05 PM IST

Director Ameer Gnanavelraja issue: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என்றும், பெயரிடப்படாத கடிதம் யாருக்கு? என்றும் சசிகுமார் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்
பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்

சென்னை: அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்பட உருவாக்கத்தின் போது இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு பிரச்சினை தற்போது வரை தொடர்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்த ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை அநாகரிகமாக திருடன் என்றெல்லாம் பேசிய விஷயம் பெரிய பிரச்சினையாக வெடித்தது.

இதற்காக திரையுலகினர் சமுத்திரக்கனி, சசிகுமார், பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்த நிலையில், ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (நவ.29) அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதில் அவர், “பருத்தி வீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன்” என்று ஞானவேல் ராஜா என்று தெரிவித்து உள்ளார். மன்னிப்பு கேட்குமாறு பலர் வலியுறுத்தி வந்த நிலையில், ஞானவேல் ராஜா வெறும் வருத்தம் மட்டுமே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்த அறிக்கை குறித்து இயக்குநர் சசிகுமார் அதிருப்தி தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.‌

அதில் “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?, நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?, திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்று சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.‌ இதன்‌ மூலம் இந்த பஞ்சாயத்திற்கு இன்னும் விடை‌ கிடைக்காமல் உள்ளது.

இதையும் படிங்க: "இயக்குநர் அமீரை இழிவுபடுத்திய ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்" - பாரதிராஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.