ETV Bharat / state

உளவுத்துறை அறிக்கையினை பரிசீலித்தபின்னரே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி!

author img

By

Published : Nov 2, 2022, 5:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில், உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை அறிக்கைக்கு பின்னரே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி- உயர் நீதிமன்றம்
உளவுத்துறை அறிக்கைக்கு பின்னரே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி- உயர் நீதிமன்றம்

சென்னை: கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், உரிய அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (நவ.2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையைக்காட்டி தமிழ்நாடு அரசு தப்பிக்கப் பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயகம் உரிமை என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தமிழ்நாடு அமைதிப்பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்னை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்விஎழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக்கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனிதச்சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால், வழங்க முடியாது எனத் தெரிவித்தார். உள்அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்னை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்.ஆர்.இளங்கோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோவையைத்தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, ’மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார். 'தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும்' எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குத் தான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையைப் பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா? வேண்டாமா? என உத்தரவு பிறப்பிப்பதாகக்கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (நவம்பர் 4) தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: விசாரணை கைதி விக்னேஷ் வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.