ETV Bharat / state

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்; பட்ஜெட் உரையில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

author img

By

Published : Mar 13, 2023, 4:19 PM IST

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியமாக ரூ.300 வழங்கப்படும், அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2023-24ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 13) தாக்கல் செய்தார். ரூ.11,600 கோடி மதிப்புள்ள பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இலவச மடிக்கணினி: பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மீனவ சமூக முதியோருக்கு இதுவரை ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.3,500 வழங்கப்படும். இதன் மூலம் 2000 மீனவர்கள் பயன் பெறுவார்கள்.

வீடு கட்டும் திட்டம்: புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும். காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை கட்டப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டு 2000 வீடுகள் கட்டப்படும். காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடையாதவர்கள் இதில் பயன்பெறலாம். இதில் பட்டியல் சமூகத்தினருக்கு ரூ.5 லட்சம், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.3.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

எரிவாயு சிலிண்டருக்கு மானியம்: புதுச்சேரியில் உள்ள கோயில்களில் ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள், நகைகள் ஆகியவை மின்னணு மயமாக்கப்படும். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 12 மாதங்களுக்கு இந்த மானியம் தரப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.126 கோடி செலவு ஆகும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் அமைக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு நிதி: அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுற்றுலா சங்கம் ஏற்படுத்தப்படும். புதுச்சேரியில் இயங்கக்கூடிய பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதில் 50 மின்சார பேருந்துகள், 50 டீசல் பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 10 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. பெண் குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50,000, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 வருட காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும்" என்றார்.

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி அமளி - நாடாளுமன்றம் முடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.