புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல்/பழங்குடி இன வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சிமுறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் ஐந்து நாள்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 விழுக்காடும், பட்டியல்/பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு பிறப்பித்த புதிய தேர்தல் அரசாணைகளை எதிர்த்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல்/பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாக சிவா கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசியல் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற விதித்த காலக்கெடு அக்டோபரில் முடிந்துவிட்டது என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு நடத்த கால அவகாசம் ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாக ஒத்திவைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 18) வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து விசாரணையைத் தள்ளிவைத்தனர். அதேசமயம், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்த உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான தடை தொடரும் - நீதிமன்றம்