ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான நபர் சிறையில் தாக்கப்பட்டாரா?: என்ஐஏ அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

author img

By

Published : Mar 16, 2023, 3:32 PM IST

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீன் சிறையில் தாக்கப்பட்டாரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி, கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காருக்குள் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கான முயற்சி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, ஐஎஸ் ஆதரவான வாய்ஸ் ஆஃப் கொரசான் பத்திரிகை சார்பில், அறிக்கை வெளியானது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "விசாரணைக்காக முதலில் 9 நாட்களும், பிறகு 8 நாட்களும் எனது மகன் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் எனது மகனை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். புழல் சிறையில் அவரை சந்திக்க சென்ற போது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனது மகனை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சிறைத்துறையிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது, சிறைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என் மகனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை தரப்பில், "மனுதாரரின் மகன் முகமது அசாருதீனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என வாதாடப்பட்டது. மனுதாரர் முகமது யூசுப் தரப்பில், "என் மகனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், முகமது அசாருதீனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர். சிறையில் இருக்கும்போது அசாருதீன் தாக்கப்பட்டாரா என்பது குறித்து, தேசிய புலனாய்வு முகமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தருமபுரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.