ETV Bharat / state

வாகன தணிக்கையில் வாக்குவாதம்.. உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது!

author img

By

Published : Mar 4, 2023, 9:39 AM IST

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prosecutor arrested in Chennai for assaulting an sub inspector
சென்னையில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது

சென்னையில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது

சென்னை: தலைநகரில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், கொலை குற்றங்கள் பொதுமக்களுக்கான பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக இரவு ரோந்து, வாகன தணிக்கை போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையினால் குற்றங்கள் தடுக்கப்படுவதுடன் தலைமறைவான குற்றவாளிகளும் அடையாளம் காணப்படுகின்றனர். மேலும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவதினால் இரவு நேரங்களில் பணி முடிந்து திரும்பும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் ஏற்படுகிறது.

அந்தவகையில் நேற்று இரவு சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் போர் நினைவு சின்னம் அருகே கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மனைவியுடன் வந்த நபர் ஒருவரை போலீசார் நிறுத்தி வாகனத்தின் பதிவேடுகளை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நபர் வாகனத்தில் அமர்ந்தவாறே தான் ஒரு வழக்கறிஞர், ஹெல்மெட் உட்பட அனைத்து வாகன பதிவேடுகளும் சரியாக உள்ளது என உதவி ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் அவர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நபர் "வாகனத்தில் பின்னால் பெண் அமர்ந்து செல்லும் போது எப்படி நிப்பாட்டுவ, தான் ஒரு வழக்கறிஞர்" எனக்கூறி உதவி ஆய்வாளர் பிரபாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த நபர் ஒருமையில் அங்குள்ள காவலர்களை திட்டியதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென அந்த நபர் உதவி அய்வாளரை முகத்தில் குத்தியதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார்.

பின்னர் போலீசார் அந்த நபரை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த பிரசன்னா வெங்கடேஷ் என்பதும், ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இவரது தந்தை சூர்யா பிரகாஷும் வழக்கறிஞராக இருப்பதும் தெரிய வந்தது.

பின்னர் உதவி ஆய்வாளரை தாக்கிய பிரசன்னா மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போலீசார் மீது குற்றவாளிகளால் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த துணியும் போது போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள தாக்குவதற்கு தயங்க கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வழக்கறிஞர் ஒருவரே போலீசாரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் சி.வெ.கணேசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.