ETV Bharat / state

ஸ்டாலின் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்- ராம. திருச்செல்வம் அறிக்கை

author img

By

Published : Jul 10, 2021, 8:48 AM IST

விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றிற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கோரும் முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் என விவசாய மேம்பாட்டுக்கான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் திட்ட இயக்குநர் ராம. திருச்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ச்
ச்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஒரு முதலமைச்சராக இத்தனை தீர்க்கத்துடனும், தீவிரத்துடனும் மு.க. ஸ்டாலின் முழுமூச்சுடன் களத்தில் இறங்கி காலத்தின் சவால்களை முறியடித்து நமிர்ந்து நிற்பார் என்று எதிர்க்கட்சியினர் மட்டுமன்று, அவர்களது சொந்தக் கட்சியினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஸ்டாலின் முதலமைச்சரானது பெரிய வரம்

ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக, விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்னைகளின் தீர்வுக்கான செயல் திட்டங்களுடன், இந்த அரசியல் இயந்திரக் கட்டமைப்புடன் கட்டி உருண்டு போராடிக் களைத்துப்போன எங்களைப் போன்றவர்களுக்குத்தான், இவரைப் போன்ற ஒருவர் முதலமைச்சராக வாய்த்தது எத்தனை பெரிய வரம் என்பதை முழுமையாக உணர முடியும்.

விவசாயத்தின் பிரச்னைகளுக்குத் தகவல் தொழில்நுட்பத்தின் துணையோடு தீர்வு காணும் வகையில், கிராமங்களின் அளவில் திட்ட மிடுதல் தொடங்கி விற்பனை வரையிலான செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அதனை அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக கடந்த 20 ஆண்டுகளாக முயன்று வருகிறோம்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டம்

இத்திட்டம் 2009 காலக்கட்டத்தில் சோதனை முயற்சியாக, ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் பலனை ஆய்வு செய்த மாநில, ஒன்றிய அரசின் உயர்நிலை அலுவலர்களின் கூட்டுக்குழு, இது இந்திய விவசாயத்தில் புதிய பரிமாணத்திற்கு வழிவகுக்கும் என்ற மதிப்புரையோடு, கடப்பா மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு நிதி ஒதுக்கி அனுமதி வழங்கியது.

ஆனால் 2009-10ஆம் ஆண்டுகளில் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. எனினும், நாங்கள் மனம் தளராமல் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகளிடம் முயற்சி செய்து வருகிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஈடுபாடு, நிதிப்பங்களிப்புடன் கிராம நீர்நிலைகளைச் செப்பனிட்டு, பயிர்மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

எங்களது நீண்ட பயணத்தில், அரசு இயந்திரம் செயல்படும் விதத்தை நேரடியாகக் காண்பதற்கும், அதிலுள்ள சாதக பாதக விளைவுகளின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொள்வதற்குமான வாய்ப்பு நிறையவே கிடைத்தது. அப்போதெல்லாம், நமது அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தும்.

பிற நாடுகளில் மக்களின் உணர்வுகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து மனம் ஏங்கும். தற்போது உள்ள நிலை நீடித்தால், நாட்டின், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் எங்களை ஆட்டுவிக்கும்.

நம்பிக்கை தந்த ஸ்டாலின்

இந்தச் சூழலில்தான், பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு வடிவங்களில் திட்டமிடப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

அங்கு அவர் மக்களுடன் கலந்துரையாடிய விதம் மிக வித்தியாசமானதாக, நம்பிக்கை தரும் விதமாக இருந்தது. குறிப்பாக, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் அவர் மேற்கொண்ட 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற சுற்றுப்பயணத்தின் போதான மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில், 'உங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி.

எனது அரசின் முதல் 100 நாள்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு மு.க.ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பு - என்ற அவரது உறுதிமொழி நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்திலும், குழப்பத்திலும் இருந்த தமிழ்நாட்டு மக்கள் மனதிற்குள் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது.

அந்த நம்பிக்கையின் கீற்று எனக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை. விளைவு, எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் கொண்டு போய், எங்களது விவசாயத் தீர்வுக்கான திட்டத்திற்கான கோரிக்கையை மனுவாகக் கொடுப்பது என முடிவு செய்தேன்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் தலைவர்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் எங்கே போகும் என்பதைப் பலமுறை நேரில் பார்த்தவன் என்பதால், அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனாலும், ஸ்டாலினின் உறுதி மிக்க சில முன்னெடுப்புகள், எனக்குள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.

அந்த நம்பிக்கை தந்த ஊக்கத்தில் தான், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முதல் டெல்லிப் பிரமுகர்கள் வரை சந்தித்தும், கொடுத்தும், எடுத்துச் சொல்லியும் எவரும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்தக் கோரிக்கையை, மாநில எதிர்க்கட்சி ஒன்றின் குறைகேட்புக்கான பெருந்திரள் கூட்டத்தில், பல்லாயிரக் கணக்கானோரில் ஒருவனாகச் சென்று கொடுக்கப்போனேன்.

மக்களை ஈர்த்த ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காணப்பட்ட தீர்க்கமும், தீவிரமும், திடமான நகர்வுமே அரசியல் சார்பு ஏதுமற்ற எனக்குள் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்த பிறகு எனக்குள் பெருக்கெடுத்த உற்சாகம் சட்டென்று வற்றி விட்டது.

ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அளிக்கக் கூடிய உறுதிகளையும், செயல்திட்டங்களையும் தனது குரலில் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஏதோ ஒரு நம்பிக்கை மீண்டும் எனை உந்த, அவர்கள் அறிவித்திருந்த முறைப்படி எனது மனுவையும் கொடுத்துவிட்டு, ரசீதையும் பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்

தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மக்கள் வாக்கு எண்ணிக்கைகாக திக்திக் மனநிலையுடன் ஒரு மாதம் காத்திருந்தனர். எதிர்பார்த்த படியே தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அப்போது தான், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற கணீர் பிரகடனத்துடன், ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார். நீண்ட காத்திருப்பும், நெடிய பெருங்கனவும் ஒரு மலைப்பாம்பைப் போல தன்னைச் சுற்றிப் பிணைத்து இறுக்கிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான பேரிடர் சுழலுக்கு மத்தியில்தான், ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே கரோனாவின் கொடுங்கரத்தை ஒடுக்குவதற்கான பணிகளை நோக்கி அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டிருந்தார்.

அரசு இயந்திரம் என்பது ஆயிரம் பற்களைக் கொண்ட பிரமாண்ட சக்கரம். அது சுற்றிச் சுழல்வதும், சுருண்டு கிடப்பதும் யார் கையில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததுதான். அரசு இயந்திரம் உரியவர் கையில் கிடைத்திருக்கிறது என்பதை, ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற அடுத்தடுத்த நகர்வுகள் ஒரு சில நாள்களிலேயே நாட்டுக்குணர்த்தின.

கரோனா தொற்றுப் பாதிப்பு, உயிரிழப்பின் எண்ணிக்கை மளமளவெனச் சரியத் தொடங்கியது. ஊரடங்கு தொடங்கி, சிகிச்சை, பொருளாதார உதவி, சீரமைப்பு என வேகம், விவேகம், வியூகம் மூன்றும் கைகோர்த்த முதலமைச்சரது நிர்வாக அணுகுமுறை, ஆண்டாண்டு காலமாய் அவரைச் சகட்டு மேனிக்கு விமர்சித்து வந்த அரசியல் எதிரிகளையே வியக்க வைத்து விட்டது.

அரசிடம் இருந்து கடிதம்:

நாடே வியந்த நிலையில், நான் வியந்ததில் என்ன புதுமை இருக்கிறது என நீங்கள் கேட்கலாம், என் வியப்புக்கு இதுமட்டும் காரணமல்ல தேர்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் கொடுத்துவிட்டு வந்திருந்தேனே ஒரு கோரிக்கை மனு.

அதுகுறித்து ‘இத்தனை களோபரத்தில் எங்கே அரசு பரிசீலிக்கப் போகிறது’ என்று நானே மெத்தனத்தில் இருந்தேன். ஆனால், ‘உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது’ என்று, எனது கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

என்னால் நம்பவே முடியவில்லை. நாம் இந்தியாவில் – தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இங்கு இப்படியெல்லாம் கூட நடக்கிறதா? குறுஞ்செய்தி வந்ததற்கே வியப்பின் விளிம்பில் இருந்த என்னை, அடுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடமிருந்து வந்த கடிதம் விண்ணில் சிறகடிக்க வைத்து விட்டது.

‘விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகள், அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆட்சியமைந்து நாற்பது நாள்கள் கூட நிறைவடையாத நிலையில் ஜூன் மாதம் 14ஆம் தேதி அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாருமே கண்டுகொள்ளாத எனது கோரிக்கையை, அதுவும் தேர்தல் களேபரத்தில் மனுவாகக் கொடுக்கப்பட்டதை, மாநில அரசு பரிசீலித்து விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்துக் கடிதம் அனுப்பியிருப்பது எத்தனை பெரிய செய்தி இந்த நாட்டில்.

மக்கள் பிரச்னையில் தீவிரம் காட்டும் ஸ்டாலின்

ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு மட்டுமே ஆளாகி வந்த இந்த அரசு இயந்திரத்தின் செயல்பாடு, நம்மைத் திகைக்க வைக்கும் அளவுக்கு மாறி இருக்கிறதென்றால், அதற்கு, முதலமைச்சர் ஸ்டாலினின் உளப்பூர்வமான மக்கள்நல வேட்கையும், அதற்கான அவரது அயராத பெருமுயற்சியும் தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

மக்களின் மனநிறைவு (Human Satisfactory Index) குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தற்போது கருத்துக் கணிப்பு நடத்தினால் அது இப்போது உச்சத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன். மக்களின் பிரச்னைகளின் மீது மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தும் முதமைச்சர் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்ற நம்பிக்கை, என்னைப் போலவே சாமான்ய மக்களில் பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டிருக்கும் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை. அந்த அளவுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் துல்லியம் மிக்க துரிதகதியை அடைந்திருக்கின்றன.

வரலாற்றில் அரிதான நிகழ்வு

கரோனா கொடுந்துயர், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான சூழலில் நாடு இருக்கும் நிலையில், மக்கள் இடர் களைவதை மட்டுமே தனது முதன்மையான செயல்திட்டமாக வகுத்துச் செயல்படும் ஆற்றல் மிக்க முதலமைச்சர் ஒருவர் நமக்கு வாய்த்திருப்பதை, வரலாற்றில் அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கிறேன்.

முதலமைச்சர் என்ற பொறுப்பை அடைவதற்காக அவர் நீண்டகாலம் காத்திருக்க நேர்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்படி ஒரு முதலமைச்சர் கிடைப்பதற்காக மக்கள் அதை விட நெடுங்காலமாகக் காத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

“ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்

உதயஞாயி றொப்பவே வா வா வா “

என்ற மகாகவி பாரதியின் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளைச் சொல்லி, அசமந்தமாகி விட்டதாக அயர்வுடன் பார்க்கப்படும் மக்களாட்சி அமைப்பின் நிர்வாகச் சீர்கேடுகளை முற்றிலும் களைந்து, முழுமையான நல்லாட்சியை நோக்கி மேலும் சிறப்பாக பீடு நடைபோட, முழுமனதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவோம்.

அதற்கான ஒத்துழைப்பையும் பொதுமக்களாகிய நாம் அவருக்கு நல்கிட உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்- உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.