ETV Bharat / state

12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்ட "கல்லூரி கனவு" நிகழ்ச்சி

author img

By

Published : Jun 24, 2022, 4:19 PM IST

“நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கிறார்.

12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு  உயர்கல்விக்கு வழிகாட்ட "கல்லூரி கனவு" நிகழ்ச்சி
12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்ட "கல்லூரி கனவு" நிகழ்ச்சி

சென்னை: ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை நாளை (ஜூன் 25) காலை 9 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும்,

கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் HCL நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. HCL நிறுவனம் 2,500 அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும்,

அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அந்த மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் என உறுதி செய்யப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.