ETV Bharat / state

பல்கலை, கல்லூரித் தேர்வுகளுக்குத் தடைக் கோரி வழக்கு!

author img

By

Published : Jul 14, 2020, 5:51 PM IST

சென்னை: யுஜிசி உத்தரவின்படி பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அதன் காரணமாக, இறுதித் தேர்வு, கல்வியாண்டு தொடக்கம் குறித்து பரிந்துரைகள் வழங்க பேராசிரியர் குஹத் என்பவர் தலைமையில் நிபுணர் குழு ஒன்று யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நியமித்தது.

அந்தக் குழு, ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என ஏப்ரலில் பரிந்துரை செய்தது. ஆனால் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பரிந்துரையை மறுஆய்வு செய்யுமாறு யுஜிசி கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில் பரிந்துரையை மறுஆய்வு செய்த குழு, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்தி முடிக்கலாம் என, ஜூலை 6ஆம் தேதி தெரிவித்தது.

இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த முதுகலை மாணவர் அம்ஜத் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலிலுள்ளது.

பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழலில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசிக்காமல் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை நடத்த யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நான்கு மாதங்களாக பல்கலைகழகங்கள், கல்லூரிகள் செயல்படாத நிலையில் தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பல்வேறு கல்லூரிகள் கரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

அங்குத் தேர்வு நடத்துவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" என மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தேர்வின்றித் தேர்ச்சி அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.