ETV Bharat / state

நடிகை சித்ரா மரண வழக்கை சென்னை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை

author img

By

Published : Aug 16, 2023, 5:26 PM IST

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி, அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்து, தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர் கூட்டத்தை வைத்திருந்த நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், அதன்பின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நிலையிலும் மகளிர் நீதிமன்ற விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும், 2021ஆம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், மேலும் வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால், வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ஊக்க மதிப்பெண் விவகாரத்தில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.