ETV Bharat / state

விடியல் ஆட்சியில் விடியல் கிடைக்குமா? - பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 24, 2022, 4:38 PM IST

சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்துதரும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடியல் ஆட்சியில் தங்களுக்கும் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதே நேரத்தில் பள்ளி கல்வித்துறை வளாகத்திலுள்ள கழிவறைகளைப் பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய பாடப்பிரிவுகளில் கற்பிக்க 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்கள் பணி நிரந்தரம் வேண்டி கடந்த ஆட்சியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது இவர்களை நேரில் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்து 9 மாதம் கடந்தும் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே போதும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேசுராஜா கூறும்போது, ''2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சி அமைந்தவுடன் தங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர்.

ஆனால், தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. பணிநிரந்தரம் அளிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதலமைச்சர் பணி நிரந்தரம் என்பதை அறிவிக்கும் வரை எங்களின் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்'' எனத் தெரிவித்தார்.

விடியல் ஆட்சியில் விடியல் கிடைக்குமா? - பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த பகுதி நேர ஆசிரியை ஜெயப்பிரியா கூறுகையில், 'விடியல் அரசு தங்களுக்குப் பணி நிரந்தரம் என்ற விடியலைத் தரும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் பணி நிரந்தரம் என்பதை அறிவிக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்’ என்றார்.

இதையும் படிங்க: நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது ? - நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.