ETV Bharat / state

நெல் கொள்முதலை அரசு விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ்

author img

By

Published : Jun 24, 2021, 2:14 PM IST

நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படாததால் உழவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதலை அரசு விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ்
நெல் கொள்முதலை அரசு விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரிப் பாசன மாவட்டங்களிலும், வட மாவட்டங்களின் சில இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

விற்பனைக்காக பல்லாயிரக்கணக்கான மூட்டை நெல் தொடர்ந்து குவிந்துகொண்டிருக்கும் நிலையில், அவை கொள்முதல்செய்யப்படாததால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்முதல் பணிகள் நிறுத்தம்

காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அப்பருவ நெல்களை கொள்முதல் செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 193 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் 200-க்கும் கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கொள்முதல்செய்யப்பட்ட தலா 10 ஆயிரத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அதனால் புதிதாக கொள்முதல்செய்யப்படும் நெல் மூட்டைகளை அடுக்கிவைக்க இடமில்லாததுதான் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்று அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நெல் மூட்டைகள் தேக்கம்

கடந்த சில நாள்களாக நெல் கொள்முதல்செய்யப்படாததால் 50-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 15 ஆயிரம் மூட்டைகள் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்காக உழவர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்துக் கிடக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சில நிலையங்களில் கொள்முதல் நடைபெற்றாலும்கூட ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் முதல் 900 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல்செய்யப்படுகின்றன.

அதேநேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 3000 முதல் 5000 மூட்டைகள் வரை வருகின்றன. அதனால் அந்தப் பகுதிகளிலும் கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழலில் நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கும் நிலைக்கு நிர்வாகத்தின் தவறான முடிவுகள்தான் காரணமாகும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நெல் கொள்முதல்செய்யப்படாத காலங்களில்தான் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஆனால், இப்போது கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு நியாயமான காரணங்கள்கூட இருக்கலாம்.

அவ்வாறு அனுப்பிவைக்கப்படும்போது குறைந்தபட்சம் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டுசெல்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால்தான் காவிரி பாசன மாவட்டங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கிடக்கின்றன.

புரட்சிகரமான அறிவிப்பும், தற்காலிக பணி நிறுத்தமும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. உழவர்கள் சாகுபடி செய்யும் நெல் மூட்டைகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

அதற்காக விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. ஒருபுறம் இந்த அளவுக்கு புரட்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு இன்னொரு புறம் நெல் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்திவைப்பது நியாயமல்ல.

தெரிந்தே செய்யக் கூடாது

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் எந்த நேரமும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மழை பெய்தால் அரசு சார்பில் கொள்முதல்செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளும், விற்பனைக்காக உழவர்கள் கொண்டுவந்துள்ள நெல் மூட்டைகளும் சேதமடையும். தெரிந்தே இப்படிப்பட்டதொரு பாதிப்பை தேடிக்கொள்ளக் கூடாது. எனவே, காவிரிப் பாசன மாவட்டங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நெல் கொள்முதலை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அடக்க முடியாத யானை திமுக' - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.