ETV Bharat / state

புதிய கட்சி தொடங்க வேண்டாம் என வந்த சிக்னல்? ஓபிஎஸ்-ன் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:57 PM IST

OPS Next Palan: அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் புதிய கட்சி தொடங்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

What is OPS next political move
ஓபிஎஸ் ன் அடுத்த அரசியல் நகர்வு என்ன

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது முதல் தொடர்ந்து நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் சட்டப்போரட்டம் மேற்கொண்ட ஓபிஎஸ்-க்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது. அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இனி சட்டப்பூர்வமாக எந்த தொடர்பும் இல்லை என்ற நிலையில் அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்த சமயத்தில் ஓபிஎஸ் அணியில் சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியவர்களை அதிமுகவிற்குக் கொண்டு வர நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டிடிவி தினகரனின் அமமுகவோடு தன்னை இணைத்துக் கொள்வது, பாஜகவோடு இணைந்து விடுவது அல்லது தனியாகக் கட்சி தொடங்குவது என ஓபிஎஸ்சிற்கு ஒரு சில வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவில் சேர்வதற்கான கதவு ஓபிஎஸ்சிற்கு திறக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் இணைய இனி வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் விருப்பப்பட்டாலும் அதிமுகவில் இனி இணைய முடியாத சூழல் நிலவுகிறது என்றும். அமமுக தலைவர் பதவி ஓபிஎஸ்சிற்கு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் அதை ஏற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜகவை முழுமையாக நம்பி இருந்த ஓபிஎஸ்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில், சமீப காலமாக ஓபிஎஸ் அணிக்கும், பாஜகவிற்கும் மோதல் போக்கு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. பாஜகவும் கைவிட்ட நிலையில் இறுதியாக புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆக.21ஆம் தேதி சென்னையில் "நமது புரட்சி தொண்டன்" என்ற நாளிதழை ஓபிஎஸ் தொடங்கினார். புதிய கட்சி தொடங்குவதற்காக அம்மா திமுக, புரட்சித் தலைவர் அதிமுக என்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், சஸ்பென்ஸ் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய கட்சி தொடங்க வேண்டாம் எனவும் வேண்டும் என்றால் தாமரை சின்னத்தில் உங்களுக்கு இடம் ஒதுக்குகின்றோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பு ஓபிஎஸ் தரப்பிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமியின் அழுத்தம் இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், ஓபிஎஸ் தரப்பினர் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஓபிஎஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இது குறித்து ஓபிஎஸ் தரப்பிடம் விசாரிக்கும் போது, "பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் புதிய கட்சி தொடங்க வாய்ப்பில்லை. வருகின்ற செப்.3ஆம் தேதி காஞ்சிபுரத்தில் புரட்சி பயணம் மேற்கொள் இருக்கின்றோம்.

புரட்சி பயணத்தை முடித்த பின்னர் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெரிவிக்கப்படும். புதிய கட்சி தொடங்க ஆலோசனை மேற்கொண்டது உண்மைதான். புதிய கட்சி தொடங்கினால் அதிமுகவிற்கான சட்டப்போராட்டத்தில் சிக்கல் ஏற்படும் என்று நினைக்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "சட்டப்போராட்டத்தின் மூலம் உட்கட்சி பிரச்சனையை தீர்த்ததாக வரலாறே இல்லை. ஓபிஎஸ் தற்போது என்ன செய்வது என்றே தெரியாமல், குழப்பமான சூழ்நிலையில் உள்ளார். சிவில் வழக்கில் ஓபிஎஸ்க்கு நிவாரணம் கிடைக்காது.

சசிகலா தொடுத்த சிவில் வழக்கு நிலுவையில்தான் உள்ளது. புதிய கட்சி தொடங்கினாலும், அது தேர்தல் ஆணையத்தில் முழுமையாக அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு ஆண்டாவது ஆகும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ஏதாவது பொதுவான சின்னம் தேவை.

செப்.3 எதை நோக்கிய பயணம் என்பதை ஓபிஎஸ் தெளிவு படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தேனி தொகுதியில் அவரது மகனாவது வெற்றி பெறும் நோக்கில் ஓபிஎஸ் நகர வேண்டும். சட்டப்போராட்டம் தோல்வி அடைந்ததால் ஓபிஎஸ் புரட்சி பயணத்தை மேற்கொள்கிறார்.

ஆனால் இது போதாது, தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பயணம் செய்ததால்தான் தன்னுடன் இருப்பவர்கள் சோர்வடையாமல் இருப்பார்கள். அமமுகவுடன் கூட்டணி அமைத்தால் தென் மாவட்டங்களில் 13 தொகுதிகளில் அதிமுக வெற்றியைப் பாதிப்படையச் செய்ய முடியும். அதை நோக்கி நகர்ந்தால், ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என தொண்டர்கள் நினைக்கலாம். பாஜகவை நம்புவது நேரத்தை வீணாக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: "நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது" - முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.