ETV Bharat / state

விஜயலட்சுமி விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் சென்ற சீமான்! இன்று விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 10:45 AM IST

Hearing on Seaman petition: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மனு மீது இன்று விசாரணை!
விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மனு மீது இன்று விசாரணை!

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.

நடிகை விஜயலட்சுமி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். தொடர்ந்து சீமானுடன் உடன்பாடு ஏற்பட்டதாக கூறி அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தார்.

இந்நிலையில், அண்மையில் இந்த மனுவை மீண்டும் விசாரிக்கக் கோரி நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஜயலட்சுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். நடிகை விஜயலட்சுமிக்கு சில பரிசோதனைகள் மேற்கொண்டு அதன் முடிவுகள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி, பெங்களூரு சென்றார். இருப்பினும், இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகினார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.

திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், "நான் இயக்கிய வாழ்த்துகள் என்ற திரைப்படத்தில் வெண்ணிலை என்ற கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். அவருடைய அக்கா பிரபல நடிகை ஜெயபிரதாவின் சகோதரரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மனிதாபிமானத்துடன் உதவி செய்தேன்.

அப்போது விஜயலட்சுமிக்கும் எனக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கம் தான் இருந்தது. இது எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் மறைக்க எந்த ரகசியமும் இல்லை. என் குடும்பத்தினர், எனக்கு நெருக்கமானவர்களுடனும் விஜயலட்சுமியும் அவருடைய குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த காலகட்டத்தின் போதுதான் விஜயலட்சுமி சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயலட்சுமி என்னை வற்புறுத்தினார். அவருக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன்.

இதையடுத்துதான் எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கினார். ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டும் இதே போல் எனக்கு எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்பதால் அந்த வழக்கு வளசரவாக்கம் போலீசாரால் முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் மீது புகார் அளிததுள்ளார்.

எனவே இந்த வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இதை முடித்து வைக்க வேண்டும்" என சீமான் தனது மனுவில் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப். 20) விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: கருணை அடிப்படிப்படையில் வேலை கேட்போருக்கு கருணை காட்டுங்கள் - சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்குபிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.