ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!

author img

By

Published : Nov 2, 2021, 1:07 PM IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக
அதிமுக

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்திருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், " எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தென் தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில் ஓடிவரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் ஆகும்.

142 அடி தண்ணீர் - சட்டப்போராட்டம் நடத்தி பெற்ற தீர்ப்பு

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய நிலப்பரப்பில், மக்கள் பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீரின்றி அல்லற்பட்டு வறுமையில் வாடி, அவற்றின் விளைவாக சமூகம் நலிவடைந்து இருந்ததைக் கண்டு அந்த மக்களின் துயர் துடைப்பதற்கென்று, மறைந்த மனிதாபிமான பெருந்தகை, போற்றுதலுக்குரிய பென்னிகுவிக் தனது சொந்த செல்வத்தை வழங்கி கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணையாகும்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டதன் காரணமாகத்தான் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்தது, வறுமை நீங்கியது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு விவசாய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. எனவே, முல்லைப் பெரியாறு அணையும், அதில் தேக்கப்படும் தண்ணீரும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய் விளங்குகின்றன என்பதை எப்பொழுதும் நினைவிற்கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு உரியது என்பதையும், அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும், அது எப்பொழுதும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்பதையும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படுவது சாத்தியமானது என்பதையும், அதன் விளைவாக, தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் பெரும் பயனடையும் என்பதையும், அசைக்க முடியாத புள்ளி விபரங்களோடு உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து, வாதிட்டு, வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை வரலாறு நமக்கு கூறிக்கொண்டே இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்ற உறுதியான தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம் அளித்தது. அணையின் உறுதித் தன்மையை மேலும் நிலைநாட்டிக்கொண்டு, 152 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி (அதாவது 43.28 மீட்டர்) தண்ணீர் தேக்க அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், 2006இல் கேரள சட்டப்பேரவையில் 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்தையும் ரத்து செய்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை உறுதிபட நிலைநாட்டியது.

கேரளாவின் அழுத்தத்திறக்கு பணிந்து தண்ணீர் திறப்பு?

அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், பேபி அணை, சிற்றணை பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் 152 அடி நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் எனவும், இதற்கு கேரள அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இன்றைக்கு கேள்விக்குறியாகி இருப்பதை கைக்கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்ற திமுக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அலுவலர்களை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த் தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவூட்டுகிறோம்.

உறுதி குலையாமல் நடவடிக்கை வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

காவேரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்துவிடாமல் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

நவ.9 ஆர்ப்பாட்டம்

மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் திமுக அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் திமுக அரசு காட்டும் ஏனோதான மனநிலையையும் கண்டித்து, அதிமுக சார்பில் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.