ETV Bharat / state

தீபாவளி சிறப்பு பேருந்து: 2 நாட்களில் 3 லட்சம் பேர் பயணம்.. போக்குவரத்து துறை தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 2:23 PM IST

Diwali special bus: சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு முன்பதிவு செய்து, கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக போக்குவரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Diwali special bus
தீபாவளி சிறப்பு பேருந்து

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் செல்வார்கள். அப்போது பெருமளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது, தலைநகர் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், முடிந்த வரையில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொல்லாமல் இருப்பதற்குப் போக்குவரத்துத் துறை சார்பாகச் சென்னையில் உள்ள முக்கியமான 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது மாதவரம், கேகே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 9 முதல் 11 தேதி வரை தலைநகரிலிருந்து செல்லவும், 13 முதல் 15 வரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்குத் திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாகப் போக்குவரத்துத் துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் நேற்று (நவ.10) நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2 ஆயிரத்து 100 பேருந்துகளில், 2100 பேருந்துகளும், கூடுதலாக 1,822 சிறப்பு பேருந்துகளும் எனக் கடந்த நவ.9 முதல் நவ.10 வரை, அதாவது நேற்று நள்ளிரவு வரையில் மொத்தம் 6 ஆயிரத்து 656 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பயணிகள் பயணித்துள்ளனர்.

மேலும் இன்றும் (நவ.11) பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய சுமார் 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பயணிகள் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் குறைதீர் மையங்களும் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 2 ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி பாலாஜி சரவணன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.