சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆக.26) நடைபெற்றது. இதனையடுத்து தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி அவையில் எழுந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “25 ஆண்டுகால அரசியல் பயணத்தில் எனக்கு ஆசிரியராக இருப்பவர் முதலமைச்சர். மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து, ஒற்றை செங்கலை வைத்து உதயநிதி ஸ்டாலின் செய்த பரப்புரை பீகார் மாநிலத்தில் எதிரொலித்தது.
மாதிரி பள்ளிகள் உருவாக்க நடவடிக்கை
இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 13.6 விழுக்காடு அதிகமாக வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவதில், ஒன்றியம் பின் நோக்கியும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னோக்கியும் செல்கிறது. விளையாட்டு திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மேம்படுத்த மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகளை உருவாக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கடைபிடிக்கப்படும் இதே திட்டத்தை, தமிழ்நாடிலும் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி கல்லூரியில் படிக்க வழிவகுத்து சமூக நீதி காத்தவர் கலைஞர் கருணாநிதி.
ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை
அதன்படி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஏதுவாக ஒற்றை சாளர முறையை கொண்டுவரவேண்டும். இது பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்ட வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில், கலை, அறிவியல் கல்லூரியை நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஜெ. பல்கலை விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சி - அதிமுக வெளிநடப்பு