ETV Bharat / state

கிராம சபை கூட்டங்கள் ரத்து... ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் கண்டனம்!

author img

By

Published : Jan 25, 2021, 9:19 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை
சென்னை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்துசெய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெறித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா காலத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி-பரப்புரையில் ஈடுபடும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கிராம சபைக் கூட்டங்கள் என்றால் கசக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கிராம சபைக் கூட்டங்களைப் பார்த்து - அதற்கு கூடும் மக்களைப் பார்த்து முதலமைச்சரும், அமைச்சர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. - கிராம ராஜ்யத்தின் உயிர்நாடியாகத் திகழும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்குக் கூட வக்கற்ற அதிமுக அரசு - தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு!

இந்தத் தடை வருகின்ற மே மாதம் வரைதான்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடெங்கும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கத்தான் போகிறது. அதில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய விவாதமும் – அதிமுக ஆட்சியின் உள்ளாட்சித்துறை ஊழல்களும் - முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் கூட்டு வைத்து அடித்த கொள்ளைகளும் மக்கள் மன்றத்திற்கு வரத்தான் போகிறது.

“சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்ற முதலமைச்சர் பழனிசாமியின் கனவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கனவும் நிச்சயம் மக்கள் சக்தியால் கலைக்கப்பட தான் போகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.