ETV Bharat / state

ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 1:42 PM IST

Aayi alias Pooranam: மதுரையில் அரசுப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்பிலான இடத்தை அரசுக்கு தானமாக வழங்கிய ஆயி அம்மாளுக்கு குடியரசு நாள் விழாவில், அரசின் சார்பில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, யா.கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் என்பவரது மனைவி ஆயி என்ற பூரணம், தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.

  • கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்… pic.twitter.com/NGiHY3iJYG

    — M.K.Stalin (@mkstalin) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பூரணம், சுமார் ரூ.7 கோடி ரூபாய் மதிப்புமிக்க அந்த இடத்தை, தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அவருக்கு சமூக வலைத்தளங்களிலும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில், இது குறித்து அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆயி பூரணம் பணிபுரியும் வங்கிக்கு நேரில் சென்று, அவருக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயி என்ற பூரணத்தை பாராட்டி, அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து, தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக கொடையாக அளித்துள்ளார், மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்.

ஆயி அம்மாளின் கொடையால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். கல்வியையும், கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில், வருகிற குடியரசு நாள் விழாவில், அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஆயி என்ற பூரணம், தன்னுடைய இந்த முயற்சிக்கு தனது சொந்த பந்தங்களோ அல்லது உடன் பிறந்த தனது மூத்த சகோதரிகள் 5 பேரும், மாமா உள்ளிட்ட யாருமே தடை கூறவில்லை என நெகிழ்ந்தவர், ஜனனியின் கனவை நாம் இணைந்து நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து உடனடியாக, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதையும் படிங்க: பூரணத்தால் பூரணமாகும் ஏழை மாணவர்களின் கல்விக் கனவு - நிலக்கொடை தந்த மதுரை பூரணம் அம்மாளின் வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.