ETV Bharat / state

ரூ.1-க்கு 29 பைசா மட்டுமே.. மத்திய அரசை கடுமையாக சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 5:17 PM IST

Updated : Jan 5, 2024, 6:55 PM IST

Minister Thangam Thennarasu: சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது எனவும், ஆனால், மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

minister thangam thennarasu
அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை.

2014 முதல் 2023 வரை 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி வரி பகிர்வு தொகையாகும். ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித் தொகையாக உள்ளது. ஆனால், நேரடி வரி வருவாயாக தமிழ்நாட்டில் இருந்து 6.23 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு பெற்றுள்ளது.

ஆனால், தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் மறைமுக வருவாய் பற்றிய விவரங்களை மத்திய அரசு தரவுகளைப் பகிரவில்லை. சட்டப்பேரையில் ஏற்கனவே கூறியதுபோல், தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மீண்டும் நாம் திரும்பப் பெறுவது 29 பைசாதான்" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. உதாரணமாக, 2014-2015ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களான கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு குறைவாகத்தான் நிதி ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடக்கும் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.

இந்த திட்டத்திற்கு, 3,273 கோடி ரூபாய்தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட, மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது" என்று கூறினார்.

மேலும், “மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. மத்திய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும். மத்திய அரசு செஸ் வரியை மாநிலத்திற்கு வழங்கினால், கூடுதலான திட்டங்களைச் செயல்படுத்த முடியும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி!

Last Updated : Jan 5, 2024, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.