சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட அலுவலர்களுக்கும், மண்டல அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கி (Walkie Talkie) வழங்கும் புதிய வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதற்கட்டமாக 20 மண்டல இணை ஆணையர், இரண்டு கூடுதல் ஆணையர், இணை ஆணையர்களுக்கு 100 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் வெளியிட்டதில் 1690 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
![இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-sekarbabu-7209106_06052022111444_0605f_1651815884_987.jpg)
குறிப்பாகக் கணினி வழியில் பூஜைகளை முன்பதிவு, திருக்கோயிலின் 4 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தற்போது மானிய கோரிக்கையில் 160க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 2244 பணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை 24 மணிநேரமும் இயக்க இந்த வாக்கி டாக்கி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
![இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட அலுவலர்களுக்கு வாக்கி டாக்கியினை வழங்கும் விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15208076_sb1.jpg)
தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சி மே 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான ரம்யமான சூழல் உருவாகும். தமிழ்நாட்டின் மூலவராகவும் உற்சவராகவும் முதலமைச்சர் திகழ்கிறார். பட்டிண பிரவேச விவகாரத்தில் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்" என தெரிவித்தார்.
![மண்டல அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கியினை வழங்கும் விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15208076_sb.jpg)
பட்டிண பிரவேச நிகழ்வில் நானே பல்லக்கு தூக்குவேன் என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை யாருக்கும் பல்லக்கு தூக்கக் கூடாது. நியாயத்திற்குப் பல்லாக்கு தூக்க வேண்டும் என்றார். திருச்செந்தூர் கோயிலில் 1000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அர்ச்சகர் ஒருவர் அனுப்பும் நிகழ்வு நடைபெற்று உள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சென்னையில் உள்ள பழமையான கோயில் வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் அந்த கோயில் குளம் சிதிலமடைந்து காணப்படுவதால் சீரமைப்பு பணிகள் இந்த மானிய கோரிக்கையில் சீர்செய்யப்படும். இரண்டு தினங்களில் ஆணையருடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
![முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15208076_sb2.jpg)
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலை தனிச்சட்டம் இயற்றி அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்துவதற்காக தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக , சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'இறைவன் சொத்து இறைவனுக்கே'- அமைச்சர் சேகர்பாபு