ETV Bharat / state

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 4:06 PM IST

TN school public exam date: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுத் தேதிகள் தீபாவளி முடிந்த உடன் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார்.

தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்அறிவிப்பு
தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்அறிவிப்பு

தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவுகளையும், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 905 ஆசிரியர்கள் மற்றும் 29 ஆயிரத்து 909 ஆசிரியர் அல்லாப் பணியாளர்களுக்கான பலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு ஏதுவாக "பணியாளர்களுக்கான குறைதீர் புலம்" (Staff Grievance Redressal Cell Portal & App) என்ற செயலியையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 905 ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை விண்ணப்பிக்க ஏதுவாக இணையதளம் மூலமாகவே பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (Staff Grievance Redressal Cell Portal & App) தொடங்கி வைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் கோரிக்கைகள் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தீர்வுக்காணப்படும். மேலும் ஆசிரியர்களின் குறைகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்போம். மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளால் அனுமதி அளிக்க முடியாதவற்றை பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கும், அவரால் முடியாதபோது பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும் அனுப்பி வைப்பார்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வுக் காண இயலவில்லை என்றால், அரசின் கொள்கை முடிவு எடுக்க வேண்டியவை குறித்தும் கண்டறியப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான ஆலோசனைகளும் இந்த கூட்டத்தில் நடைபெற்றது. பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்காெள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜெஇஇ(JEE) தேர்வுகள், நாடாளுமன்ற தேர்தல் இவற்றை கருத்தில் கொண்டு பொது தேர்வு தேதியை முன்னரே அறிவிக்க உள்ளோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்வு தேதிகளின் அறிவிப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. மேலும் தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதி அறிவிக்கப்படும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் காலையில் என்னை சந்தித்தனர். சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிவகைகளை செய்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் வழி இருந்தால், அதை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்.

தொடக்கக் கல்வித்துறையில் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவினை மட்டும் மேற்கொள்ளும் வகையிலும், பிற பதிவுகளை மேற்கொள்ள 30 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்" - வெளியுறவு இணை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.