ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு: முருகன் லண்டன் செல்ல மறுப்பு தெரிவித்த மத்திய அரசு: பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:49 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதையடுத்து, பயண ஆவணம் வழங்குவதற்கான நேர்காணலின் போது முருகனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

முருகன் லண்டன் செல்ல மறுப்பு தெரிவித்த மத்திய அரசு
முருகன் லண்டன் செல்ல மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரைக் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன் மற்றும் சாந்தன் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "லண்டனில் வசிக்கும் என் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காகத் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் சென்று வருவதற்குப் பாதுகாப்பு வழங்கச் சென்னை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமாறு" நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வில் இன்று(டிச.18) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி, "கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது. இலங்கை நாட்டின் துணை தூதரகம் உரிய ஆவணங்களை வழங்கினால் மட்டுமே இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியும்" என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பில், "திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "முருகனுக்குப் பயண ஆவணம் வழங்குவதற்கான நேர்காணலுக்கு இலங்கை துணை தூதரகம் அழைக்கும் போது முருகனுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 45 பேர் இடைநீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.