ETV Bharat / state

ஃபார்முலா 4 கார் பந்தயம் தடை கோரிய வழக்கு: ராணுவம், கடற்படை அனுமதி கடிதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 4:46 PM IST

Formula 4 Car Racing Ban Case: ஃபார்முலா 4 கார் பந்தயம் தடை கோரிய வழக்கில் தீயணைப்பு, ராணுவம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி கடிதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளை (நவ.30) தள்ளி வைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக, சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்தப்படுகிறது. இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், தீவுத்திடல் மட்டுமல்லாமல் சென்னை நகரில் இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஹரிஷ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், இந்த பந்தயத்தை நடத்துவதற்காக மாநில அரசு 48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கார் பந்தய வழித்தடத்திற்காக சுவாமி சிவானந்தா சாலை, காமாராஜ் சாலையில் நேப்பியர் பாலம் முதல் தீவுத்திடல் கொடிமரச்சாலை வரை, அண்ணா சாலை ஆகியவற்றில் சாலை மற்றும் நடைபாதை மாற்றியமைத்தல், சாலை தடுப்பான் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள 7 கோடியே 40 லட்ச மாநகராட்சி ஒதுக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் துறைமுகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ராணுவ மற்றும் கடற்படை அலுவலகங்கள் செல்கின்ற வழியில், பந்தய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, துறைமுகத்திற்கு செல்லும் கன ரக வாகனங்களின் போக்குவரத்து, ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பந்தயங்கள் நடத்தப்படுவதாக வாதிடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் பந்தய களம் இருக்கும் நிலையில், பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில், தீவுத்திடலில் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும் போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால், இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் பாதிக்கும் என குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், அப்பகுதியில் ஒலி மாசை ஏற்படுத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு பரிசீலிக்கப்படாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு தரப்பில், தெரு பந்தயமாக இரண்டு நாட்கள் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஏற்கனவே இந்த பந்தயம். ஹைதராபாத்தில் நடத்தப்பட்டதாகவும், சென்னையில் முதன்முறையாக முயற்சிப்பதாகவும், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யும் முன் ராணுவம், கடற்படையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பார்முலா 1,2,3யுடன் ஒப்பிடும் போது பார்முலா 4 அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. மருத்துவமனையின் கதவுகள் மூடப்படாது எனவும், யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், 98 டெசிபல் அளவு தான் ஒலி எழுப்பப்படும் எனவும், 12 வாகனங்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போட்டிக்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையின் நோடல் அதிகாரியான மருத்துவர் ஆனந்த் குமார் ஆஜராகி பந்தய வழித்தடம் மருத்துவமனையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என உறுதி அளித்தார். இதையடுத்து காவல்துறை, தீயணைப்பு, ராணுவம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி கடிதங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை (நவ.30) தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்ட வன்முறை: எடப்பாடி பழனிசாமி மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.