ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து கூற நிர்மல்குமாருக்கு தடை!

author img

By

Published : Apr 12, 2023, 12:57 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
அமைச்சர்

சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நிர்மல் குமார், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக நேர்காணல்களும் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம் சாட்டப்படுவதாகவும், மனுதாரரான அமைச்சர் குறித்த அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று(ஏப்.12) தீர்ப்பளித்தார். தீர்ப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்படுவதாகவும், ட்விட்டரில் அவர் ஏற்கனவே பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தமிழக பாஜகவின் ஐ.டி.பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அண்மையில் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் ராஜினாமா - நிர்மல்குமாருடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.