ETV Bharat / state

பட்டா கோரிய மனு விவகாரம்: சீராய்வு மனுவிற்கு நில நிர்வாக ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Dec 17, 2022, 5:35 PM IST

பட்டா வழங்கும் விவகாரம் தொடர்பாக, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முறையிட, 90 நாட்கள் அவகாசம் உள்ளது குறித்து, புதிதாக சுற்றறிக்கை பிறப்பிக்க, வருவாய் நிர்வாக ஆணையருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aa
aaஃப்

சென்னை: நிலத்துக்கு பட்டா கோரி கோவை, சூலூரைச் சேர்ந்த ராமாத்தாள் என்பவர் அளித்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்று கோவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெகநாதன், சுப்ரமணியம் ஆகியோர் கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். குறித்த கால வரம்புக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என மனுவை நிராகரித்து, மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இன்று (டிச.17) விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பட்டா புத்தகச் சட்ட விதிகளில், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய 90 நாட்கள் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், 90 நாட்கள் கடந்தாலும், தாமதத்துக்கான காரணங்களை குறிப்பிட்டு முறையிடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி, மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், சீராய்வு மனுவை மீண்டும் கோவை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அதன் மீது 6 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், விதிகளில் கூறப்பட்டுள்ள 90 நாட்கள் கால வரம்பு தொடர்பாக, புதிய சுற்றறிக்கையை, 6 வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் நில நிர்வாக ஆணையருக்கு நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இனியாவது எங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும்' - பழங்குடி மக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.