ETV Bharat / state

Mocha Cyclone: வலுப்பெற்றது 'மோக்கா' புயல்; 9 மாவட்டங்களில் கனமழை!

author img

By

Published : May 11, 2023, 3:04 PM IST

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று “மோக்கா” புயலாக வலுப்பெற்றது. ஆகையால், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Mocha Cyclone
வலுப்பெற்றது “மோக்கா” புயல்

சென்னை: ''தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (மே.10) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே.11) காலை 5.30 மணி அளவில் “மோக்கா” புயலாக வலுப்பெற்று, இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு - தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது.

மேலும் இது வட - வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு நாளை (மே.12) காலை முதல் வடக்கு - வடகிழக்குத் திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிரப் புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு மே.13 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயரும்.

அதைத் தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி காலை, தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். இதனிடையே இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மேலும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து, 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதிகள்:- 11.05.2023 மற்றும் 12.05.2023 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:- 11.05.2023ஆம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் நிலவுகிறது. மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் 12.05.2023 மாலை வரை காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் மேற்கு வங்கக்கடல் (தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகள்):- 11ஆம் தேதி சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:- இன்று காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் நாளை மறுநாள், காலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோ மீட்டர் வேகத்திலும், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் காலை வரை, மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறையும்.

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:- நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து நாளை மறுநாள் காலை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், மேலும் நாளை மறுநாள் மாலை முதல் 14ஆம் தேதி காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:- வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ருத்ரன் பட பாடலுக்கு நடனமாடிய கலைஞர்களுக்கு சம்பள பாக்கி.. சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.