ETV Bharat / state

7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு!

author img

By

Published : Oct 23, 2020, 9:54 PM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காவிட்டால் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே இடங்கள் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

mbbs-bds-counselling-will-get-postponed-in-tamilnadu
mbbs-bds-counselling-will-get-postponed-in-tamilnadu

இந்தியாவில் இளநிலை மருத்துப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த செப். 13, அக். 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர தகுதிப்பெற்றனர்.

அதில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதிய 99 ஆயிரத்து 610 மாணவர்களில், 57 ஆயிரத்து 215 மாணவர்கள் தகுதிப்பெற்றனர். இவர்களில் அதிகளவிலான மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 6 ஆயிரத்து 692 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இவர்களில் ஆயிரத்து 633 மாணவர்கள் மட்டுமே தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அவர்களில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில், ஒருவர் மட்டுமே 423 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 500-க்கு மேல் 4 மாணவர்களும், 400-க்கு மேல் 14 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்கள் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே அவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீதான தீர்ப்பு வரும் வரையில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வினை தமிழ்நாட்டில் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு மசோதா மீது ஆய்வுசெய்ய 3 முதல் 4 வாரங்கள் தேவை என ஆளுநர் கூறியுள்ளதால், அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்றில் மாணவர்கள் சேர்வதற்கு முன்னர் கலந்தாய்வினை தொடங்குவதற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். இதனால் அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த பின்னர், தமிழ்நாட்டில் கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தால் தமிழ்நாடு மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில், ''மருத்துப்படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது மிகமிகக் குறைந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே இந்தக் குறைப்பாட்டை போக்குவதற்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒருமனதாக அரசு நிறைவேற்றியது. அதற்கு எதிர்கட்சிகளும் முழுமையாக ஆதரித்தன.

இந்தச் சட்ட மசோதாவை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்தது. ஆனால் ஆளுநர் இதைப்பற்றி ஆய்வுசெய்ய 3 முதல் 4 வாரங்கள் வேண்டும் என கூறுவது சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற நோக்கத்தில் உள்ளதாகக் கருதுகிறேன்.

உடனடியாக ஆளுநர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் மூலம் இந்தாண்டு மட்டுமே 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் 400 மாணவர்கள் சேர முடியும். எனவே அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

அதிமுகவுடன் இணைந்து பாேராட தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே அனைத்துக்கட்சிக கூட்டத்தைக் கூட்டி கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு ஆளுநரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அதன்பின்னரும் அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடத்தியாவது அனுமதி பெற வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 400 கோடி... அரசு பள்ளிகளை ஏன் மேம்படுத்தக் கூடாது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.