ETV Bharat / state

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

author img

By

Published : Aug 18, 2021, 8:17 AM IST

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
Fake documents
Fake documents

சென்னை: பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (46). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னையில் உள்ள இந்தியன் வங்கி, ஆயிரம் விளக்கு கிளையில், பி.கே டூல்ஸ் (BK Tools) என்ற பெயரில் போலியான நிறுவனத்தை உருவாக்கி, அதற்கான போலி ஆவணங்களையும் சமர்ப்பித்து, அதன் மூலம் இந்தியன் வங்கியில் நடப்புக் கணக்கு (Current Account) ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து அக்கணக்கு மூலம் வெளிநாடுகளுக்கு எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதுபோல நாடகமாடி சுங்கத்துறையில் அளிக்கப்படும் ரசீதையும் போலியாக உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார்.

பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை

மேலும் அந்த ரசீதுகளை கண்ணன் இந்தியன் வங்கியில் சமர்பித்து பல கோடி ரூபாய் பணத்தை வெளி நாடுகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த இந்தியன் வங்கி நிர்வாகம், இந்த மோசடி செயல் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்ணன் ஏற்படுத்தியதாகக் கூறி சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான கண்ணனை கைது செய்ய போலி ஆவண தடுப்பு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கண்ணனின் இருப்பிடத்தை, அவரது செல்போன் சிக்னல் மூலம் சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் தனிப்படை காவல்துறையினர் கண்டறிந்து, நேற்று (ஆக.17) கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட கண்ணனை மத்திய குற்றபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.