ETV Bharat / state

ஓபிஎஸ் நீக்கம் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Mar 28, 2023, 10:41 AM IST

Updated : Mar 28, 2023, 11:11 AM IST

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் புதிய பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 2022 ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என வாதிடப்பட்டது.

தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொது செயலாளர் தேர்தல் நடத்தி ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் மட்டுமல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டபட்டது.

அதற்கு அதிமுக தரப்பில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது. ஒ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை, கட்சியை விட்டு நீக்க ஒரே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை கடந்த மார்ச் 22ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, தனி நீதிபதி குமரேஷ் பாபு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்கின்றனர். இந்த மேல்முறையீடு வழக்கினை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Last Updated : Mar 28, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.