ETV Bharat / state

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் கெடு விதித்த நீதிமன்றம்!

author img

By

Published : May 5, 2023, 7:05 AM IST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் - அதிக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி
எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம் - அதிக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

இதில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பு உள்ளிட்டோருக்கு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து கடந்த 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனிடையே விசாரணைக்கு ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கக் கோரி எஸ்.பி.வேலுமனி சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “விசாரணைக்கு ஆஜராக ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். கேள்வி தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், விசாரணையின்போது ஆடிட்டரை உடன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (மே 4) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார். ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையின்போது ஆடிட்டரை உடன் வைத்திருக்கவும் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் - காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.