ETV Bharat / state

ஈபிஎஸ் தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் - காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை!

author img

By

Published : May 4, 2023, 7:48 PM IST

தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கியத் தகவல்களை தவறாகத் தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும் படியும், இதுகுறித்து மே 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்பு மனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், இந்தப் புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு கால அவகாசத்திற்குப் பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் மே 26ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மத்திய குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கைத் தாக்கல் செய்த பிறகு அவசர கதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணயை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.