ETV Bharat / state

கடன் ஒப்பந்த வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 5:10 PM IST

கடன் ஒப்பந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத நடிகர் விஷால் செப்டம்பர் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் ஒப்பந்த வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கடன் ஒப்பந்த வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் தருவதாக ஏற்றுக் கொண்டு திரும்ப செலுத்தியது.

இது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாமல் உத்தரவாதத்தை மீறி "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பாக டெபாசிட் செய்யவும், சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்படியும் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும், அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டு, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், விஷாலின் "மார்க் ஆண்டனி" திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாவதற்கு முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதால், விஷாலின் புதிய படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஆஷா முன்பு நேரில் ஆஜரான நடிகர் விஷால் தரப்பு, “எந்த படத்தையும் விஷால் நிறுவனம் தயாரித்து வெளியிடவில்லை. மார்க் ஆண்டனி படம் விஷாலின் சொந்தத் தயாரிப்பும் இல்லை. படத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார். அதனால் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்” என கேட்கப்பட்டது.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் விஷாலின் அனைத்து அசையும், அசையா சொத்துக்களை இணைக்க வேண்டும். எப்படி கடனை திரும்ப அடைக்கப் போகிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏற்கனவே, 6 கோடி ரூபாய் கடன் லைகா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது என்பதால், மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் யாரும் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை. இதையடுத்து போதிய அவகாசம் வழங்கியும், நீதிமன்ற உத்தரவை மதிக்காத நடிகர் விஷால் செப் 22ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் ஆண்டனி இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.