ETV Bharat / state

மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Mar 5, 2022, 11:43 AM IST

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கி செலுத்தவில்லை எனக் கூறி, தி மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடகை பாக்கியைச் செலுத்தாத தி மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற - உயர் நீதிமன்றம் உத்தரவு , MADRAS High Court has ordered HRCED to remove seal placed on the Mylapore Club
வாடகை பாக்கியைச் செலுத்தாத தி மயிலாப்பூர் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற - உயர் நீதிமன்றம் உத்தரவு , MADRAS High Court has ordered HRCED to remove seal placed on the Mylapore Club

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையைச் செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மயிலாப்பூர் கிளப்புக்கு 2016ம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்கும் வகையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், அந்த வாடகையை செலுத்த வேண்டுமென கூறி மயிலாப்பூர் கிளப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தி மயிலாப்பூர் கிளப்பு
தி மயிலாப்பூர் கிளப்பு

இந்த உத்தரவை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று (மார்ச்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, கிளப் தரப்பில், 116 ஆண்டுகள் கோயில் சொத்தைக் குத்தகைக்கு எடுத்து கிளப் நடத்தி வருவதாகவும், வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது கிளப்புக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அறநிலைய துறை தரப்பில், 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும், அதை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 1 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதால், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலத்துக்கான வாடகையை மீண்டும் நிர்ணயிக்க கோரி அறநிலையத்துறைக்கு விண்ணப்பிக்க கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

அந்த விண்ணப்பத்தின் மீது 2 மாதங்களில் வாடகை மறு நிர்ணய நடைமுறையை முடிக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வாடகை பாக்கியைச் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் எனவும், கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டு, விசாரணையை இரு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: செங்கோல் ஏந்திய திமுக மேயர்கள்: பெருவாரியான பதவியிடங்களை கைப்பற்றிய திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.